Sunday, October 27, 2013

ஆழமாய்


ஆழமாய்


மறக்க முடியாத அந்த நாட்களில்
என் இதயம் வேகமாக துடித்துக்கொண்டேஇருந்தது..
அன்பு வைத்த என் உறவுகளை இழந்து விடுவேனோ என்று.....
உடம்பு சிலிர்க்கும் தினங்கள்.....
என் உயிரை மறந்த தினங்கள்....
அன்றைய பொழுதுகளில் ஓர் நாள் இரவு வானத்தைப் பார்க்கிறேன்
அழுகை வருகிறது... சிந்தினேன் கண்ணீர்....
அங்கே தெரியவில்லை நட்சத்திரங்கள்.....தெரிந்ததெல்லாம் 
இழந்துவிட்ட என் உறவுகள் என்பதால்.....................அன்புடன்

உணவு................

 உணவு................



என் தசைகள் துடித்தன என்னையும் மீறி
இதயம் படபடத்தது எல்லையை தாண்டி
கைகள் உணவைத் தொட மறுத்தன பசியையும் மீறி
கண்கள் மூட மறுத்தன நித்திரையை தாண்டி
எங்கோ உணவின்றி இறந்துபோன, 
மூன்று வயதுக்குழந்தையின் படத்தை
பத்திரிகையில் பார்த்தபோது....
உலகில் யார் யார்க்கு எது எது கிடைக்காவிடினும்,
உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.........அன்புடன் 

Sunday, October 13, 2013

குழந்தை உலகம்



              குழந்தை உலகம் 




குழந்தை உலகம் கள்ளம் கபடமற்றது. அதனால் அழகானது. அதற்குள் நீங்கள் நுழைய வாய்ப்புக் கிடைத்தால், ஈகோ பார்க்காமல் சென்று வாருங்கள். அதற்கு ஒரே தகுதி - நீங்களும் குழந்தை ஆக வேண்டும்; உடலால் அல்ல.. மனத்தால்..! 

உள் சென்று மழலை மொழியில் பேசுங்கள்... வாழ்க்கை இலக்கணம் தெரிந்துக் கொள்வீர். 
எதுவும் தெரியாததுபோல் இருங்கள்.. பல புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வீர். 
பலவீனமாக இருங்கள் .. மனம் பலம் பெரும். குழந்தையை உயர்வாக மதியுங்கள்..உங்கள் வாழ்வு உயரும்.

இன்றைய சமூக நெருக்கடியால் இறுகிப்போன மனத்தை நெகிழ்ச்சி ஆக்குவதற்குக் குழந்தை போல் சிறந்த மருந்து உலகில் என்றும் / எங்கும் இல்லை. குழந்தை என்பது மனித இனத்தின் தந்தை என ஃப்ராய்ட் வருணிப்பார். மனித மன இறுக்கத்துக்கான உளவியல் மருத்துவரே இந்தக் குழந்தை என்பேன் நான்.

எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?


எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?




எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?
மனத்துள் உள்ள எதிரிகளை உங்களால் எதிர்க்கொள்ள முடிகிறதா?

அச்சம், கோபம், கவலை, அவநம்பிக்கை, பேராசைகள், காம வேட்கைகள், புலனின்ப அடிமை பழக்கம், தகுதி மீறிய எதிர்ப்பார்ப்பு முதலிய எதிரிகளை எதிர்கொண்டு வெல்பவரானால் வெளி உலக எதிரிகளை எளிதில் எதிர்க் கொள்ள முடியும்.

நமது மனோசக்தி மேற்சொன்ன அக எதிர் எண்ணங்களுக்கு அதிகமாகச் செலவிட்டால் புற எதிரிகளைச் சமாளிப்பதற்கு தேவையான மனோசக்தி போதாமல் போய்விடும். அதனால்தான் எதிரிகளை எதிர்க் கொள்ள முடியாமல் நம்மில் பலர் தோற்றுப் போகின்றனர்.

தன்னை வென்றோர் தரணியை வெல்வார் ..
சான்று :காந்தி. இந்திய சுதந்திரம் வீரத்தால் பெற்றதல்ல. காந்தியின் மனோசக்தியால் பெற்றது.

மனோசக்தி விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை..

Sunday, October 6, 2013

நோய்களை உணர்த்தும் நகங்கள்... ...........................................................

நோய்களை உணர்த்தும் நகங்கள்..............................................................






நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. 

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.

ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். .

ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.

நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..

நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும்.

இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.

நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.

நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..

இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும்.

ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும்.

இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.

அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது.

இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.

சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும்.

இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.